பலுசிஸ்தானை தனி நாடாக அறிவித்துள்ள பலூச் விடுதலை படையினர் பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற கெடு விதித்துள்ளனர்.
பாகிஸ்தானின் மேற்கு பிராந்தியமான பலுசிஸ்தானில் ‘பலூச் விடுதலை படையினர், தனி நாடு கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பி வரும் பலூச் விடுதலை படையினர், பாகிஸ்தானின் பல நிலைகள் மீது தொடர் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். மேலும், தங்களை அங்கீகரிக்கும்படியும் இந்தியா மற்றும் ஐ.நா-வுக்கு பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது பலுச்சிஸ்தானை தனி நாடாக பலூச் விடுதலை படையினர் அறிவித்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து பிரிந்து பலுசிஸ்தான் சுதந்திரம் பெற்றதாக தெரிவித்துள்ள அவர்கள், பாகிஸ்தான் கொடியை அகற்றிவிட்டு பலுசிஸ்தான் கொடியை பறக்கவிட்டு தனி நாடு அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்.
பலுசிஸ்தான் வான்பகுதி, கடல் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக காலி செய்ய வேண்டும் எனவும், போலீஸ் மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள பலுச் அல்லாதவர்கள் உடனடியாக பலுசிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், பலுசிஸ்தானின் சுதந்திரத்தை ஐ.நா மற்றும் உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டுகோள் விடுத்துள்ள கிளர்ச்சியாளர்கள், நாட்டின் கரன்சி நோட்டுகள் மற்றும் பாஸ்போர்ட்களை அச்சடிக்க நிதியை விடுவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், பலுசிஸ்தானில் விரைவில் இடைக்கால அரசு அமைக்கப்படும் எனவும், அமைச்சரவையில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ‘குடியரசு பலுசிஸ்தான்’ என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது. பாகிஸ்தானுடனான சண்டையில் பலூச் விடுதலை படையினர் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.