டி.ஐ.ஜி வருண் குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசியதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வருண்குமார் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தொடர்பாக வருண் குமார் தரப்பில் ஏற்கனவே அவருடைய வாதங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இந்நிலையில் சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர் அவருடைய வாதங்களை நீதிபதி விஜயா முன்பு எடுத்து வைத்தார்.
அப்போது சீமானுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகவும் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் வகையிலும் வருண்குமார் வழக்கு தொடுத்துள்ளார் எனவும், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி வரும் ஜூன் மாதம் நான்காம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.