கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்திய கரை திரும்பிய மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் கிராமத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
கோடியக்கரை தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியிலிருந்த இலங்கை கடற்படையினர், பைபர் படகு மீது மோதி விபத்து ஏற்படுத்தி, தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வலைகளை அறுத்து எறிந்ததுடன், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி மற்றும் எரிபொருளைப் பறித்துச் சென்றதாகவும் கூறியுள்ளனர். பின்னர், அந்த வழியாக வந்த சக மீனவர்களின் உதவியுடன் கரை திரும்பியதாகவும் தெரிவித்துள்ளனர்.