கடைகளுக்குத் தமிழில் பெயர்ப் பலகையை மாற்றி அமைக்க அவகாசம் வேண்டும் என்ற மனு மீது பரிசீலினை செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடைகளுக்கு மே 30 ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.
சென்னையில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம் எனவும் அதனைப் பின்பற்றாத கடைகள் மீது தமிழக அரசின் அறிவுத்தல்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து மும்பையில் உள்ள இந்தியச் சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு வழக்கு தொடர்ந்தது.
அதில் அரசு உத்தரவை அமல்படுத்தத் தயாராக உள்ளபோதும், நிதி உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக பெயர்ப்பலகையை மாற்ற இயலாது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கக்கோரித் தாக்கல் செய்த மனுவை 4 வாரங்களில் பரீசிலனை செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
அதுவரை கடைகள் மீது கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது எனவும் உயர் நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.