சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்து 6 பேர் பலியான சம்பவத்தில் கல்குவாரியின் உரிமம் காலாவதியாகி 8 மாதங்கள் ஆகியிருப்பது தெரியவந்துள்ளது.
திருப்பத்தூர் அடுத்த மல்லாக்கோட்டையில் உள்ள கல்குவாரியில், கடந்த 20-ம் தேதி 400 அடி ஆழப் பள்ளத்தில் பாறைகளை தகர்க்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது பாறைகள் சரிந்து விபத்துக்குள்ளானதில் புலம்பெயர் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக குவாரி உரிமையாளரின் சகோதரர் கமலதாசன், குவாரி பொறுப்பாளர் கலையரசன் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார், உரிமையாளர் மேகவர்மனை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே கல்குவாரியின் உரிமம் காலாவதியாகி 8 மாதங்களாகி இருப்பதும், சட்டவிரோதமாக இயங்கி வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கல்குவாரி உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.