அமெரிக்காவில் ஐ-போன்கள் தயாரிக்கவில்லை என்றால் ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஐபோனுக்கும் 25 சதவீதம் வரி செலுத்த நேரிடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது சாத்தியமா? அமெரிக்காவில் ஐபோன்கள் உற்பத்தி செய்ய முடியுமா ? இதுவரை அமெரிக்காவில் ஏன் ஆப்பிள் நிறுவனம் செய்யவில்லை? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தவிர்க்க முடியாத அடையாளமாக இருக்கும் ஐபோன் எல்லா காலத்திலும் மிகவும் வெற்றிகரமான ஸ்மார்ட் போன் ஆகும். 2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சுமார் 2.8 பில்லியன் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சுமார் 17 ஆண்டுகளில் சுமார் 1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வருவாயை ஆப்பிள் நிறுவனம் ஈட்டியுள்ளது.
இறுதி அசெம்பிளி மற்றும் சோதனைக்கு 10 அமெரிக்க டாலர், பேட்டரிக்கு 4 டாலர், டிஸ்ப்ளே மற்றும் டச்ஸ்கிரீன் 38 அமெரிக்க டாலர் என உற்பத்தித் திறன், செலவுகளைக் குறைத்து, ஒவ்வொரு 256 ஜிபி ஐபோன்16 ப்ரோவிலும் சுமார் 400 அமெரிக்க டாலரை லாபமாக ஈட்டுகிறது ஆப்பிள் நிறுவனம். ஒரு ஐபோனின் நிகர லாபம் 36 சதவீதமாகும்.
புதிய மாடல் ஐபோன்களில் சுமார் 2,700 வெவ்வேறு உதிரி பாகங்கள் உள்ளன. கண்ணாடி உறை, ஃபேஸ் ஐடியை இயக்கும் லேசர்கள் மற்றும் செயலி மற்றும் 5G மோடம் என மொத்தம் ஐபோன் கூறுகளில் வெறும் 5 சதவீதத்துக்கும் குறைவான கூறுகளே அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 95 சதவீத உதிரிப் பாகங்களை உலக அளவில் 28 நாடுகளில் 187 விநியோகஸ்தர்கள் மூலமாக ஆப்பிள் நிறுவனம் பெறுகிறது. ஐபோன் உற்பத்திக்குத் தேவையான பெரும்பாலான பொருட்கள் சீனாவில் கிடைக்கிறது. அதனால் தான், ஐபோனின் பெரும்பகுதி சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இப்போது, சுமார் 85 சதவீத ஐபோன்கள் சீனாவில் அசெம்பிள் செய்யப்படுகின்றன. மீதமுள்ளவை இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. சீனா- அமெரிக்க வர்த்தக போரின் விளைவாக, சீனாவில் இருந்து விலகி, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தியைத் தொடங்கியுள்ளது
கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 1.75 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஐபோன்கள் தயாரிக்கப்பட்டன. அதற்கு முந்தைய ஆண்டில் 1.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபோன்களை இந்தியா உற்பத்தி செய்தது. ஆப்பிள் தனது மொத்த ஐபோன் உற்பத்தியில் கிட்டத்தட்ட 15 சதவீதத்தை இந்தியாவில் உற்பத்தி செய்கிறது. வரும் ஆண்டுகளில் இதை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கான பி.எல்.ஐ திட்டத்தின் கீழ் மானியங்களின் மிகப்பெரிய பயனாளிகளாக ஆப்பிள் மற்றும் அதன் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி என்பது ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது.
அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் எதிர்காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் தான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை தயாரிப்பதில் தனக்கு விருப்பமில்லை என்றும், இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம் பேசியதாகவும், ஐபோன்களை இந்தியாவில் தயாரிப்பதற்குப் பதிலாக அமெரிக்காவில் உற்பத்தி செய்ய வலியுறுத்தியுள்ளார். தவறினால் ஐபோனுக்கு குறைந்தது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
திறமையான பொறியாளர்கள் மற்றும் அசெம்பிள் செய்வதற்கான பொறுமைமிக்க தொழிலாளர்கள் ஐபோன் உற்பத்திக்குத் தேவைப்படுகிறது. அமெரிக்காவில் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் அசெம்பிள் சோதனைக்குத் தேவையான உற்பத்தி ஆலை எதுவும் இல்லை, மேலும் வேலைசெய்யத் தகுதியான பணியாளர்களும் அமெரிக்காவில் இல்லை.
ஒருவேளை அமெரிக்காவில் ஐபோன் தயாரிக்க முடிவு செய்தால், ஐபோனின் விலை 3,000 டாலருக்கும் அதிகமாகும். அமெரிக்கர்கள் இவ்வளவு விலை கொடுத்து ஐபோனை வாங்குவார்களா என்பது சந்தேகமே. அதனால் இந்தியாவிலிருந்து ஐபோன் உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்ற வாய்ப்பில்லை என்று வணிக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.