உலகளாவிய பயங்கரவாதத்தின் தாய்நிலமாக உள்ள பாகிஸ்தானைத் தனிமைப் படுத்தும் இந்தியாவின் ராஜ தந்திர நடவடிக்கைகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பயங்கரவாதத்துக்கு எதிரான Zero Tolerance என்ற இந்தியாவின் செய்தியை எடுத்துக் கொண்டு,நாட்டின் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த 7 குழுக்கள் ஐரோப்பிய ஒன்றிய தலைமையகம் உட்பட 32 நாடுகளுக்குச் சென்றுள்ளது.
இந்த 7 குழுக்களில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 31 தலைவர்களும், பிற கட்சிகளைச் சேர்ந்த 30 அரசியல் தலைவர்களும் என மொத்தம் 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
பாஜகவைச் சேர்ந்த பைஜயந்த் ஜெய் பாண்டா மற்றும் ரவிசங்கர் பிரசாத், ஜனதா தளத்தைச் சேர்ந்த சஞ்சய் ஜா,சிவ சேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே, காங்கிரசின் சசி தரூர்,திமுகவின் கனிமொழி கருணாநிதி, சரத்பவாரின் தேசிய வாத காங்கிரசின் சுப்ரியா சுலே ஆகியோர் தலைமையிலான ஒவ்வொரு குழுவும் 33 நாடுகளுக்குச் சென்று, பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்தும், பயங்கர வாதத்துக்கு எதிரான இந்தியாவின் போர் குறித்தும் விளக்கம் அளிக்கின்றனர்.
குறிப்பாக எதிர்க்கட்சியினை சேர்ந்த தலைவர்களும், நாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்தி பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரே குரலில் ஒரே செய்தியை உலக அரங்கில் உரக்கச் சொல்லியுள்ளனர்.
நாட்டின் ஒருமைப்பாட்டைப் பொறுத்தவரை அனைத்து அரசியல் அக்கட்சியிடமும் ஒருமித்த கருத்து உருவாகி உள்ளதாகக் கூறியுள்ள AIMIM கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, அரசியல் வேறுபாடுகளால் தேச பாதுகாப்பை எந்த அரசியல் தலைவரும் விட்டுக் கொடுப்பதில்லை என்பதை, பாகிஸ்தான் புரிந்து கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்து, முஸ்லிம் அல்லது கிறிஸ்தவர் என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், நாட்டைப் பாதுகாப்பது எப்போதும் முன்னுரிமையாகும். எனவே பாஜக கட்சியின் கொள்கையை எதிர்த்த போதும், பஹல்காம் பயங்கர வாத தாக்குதலுக்குப் பின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அரசு மேற்கொண்ட நிலையில், நாட்டை ஆதரிப்பதும் தேசத்துக்குப் பேசுவதும் தங்கள் கடமை என்று ஒவைசி கூறியுள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூர் காலத்தின் தேவை என்று கூறியுள்ள காங்கிரசின் சசிதரூர், பயங்கரவாதத்தைக் கடுமையாக, புத்திசாலித்தனமாகத் தாக்க வேண்டிய நேரம் வந்துவிட்ட காரணத்தால், குறிப்பிட்ட இலக்குகளைத் துல்லியமாக அளவீடு செய்யப்பட்ட தாக்குதல்கள் மூலம் இந்தியா அழித்துள்ளது.
உலக வர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 2,731 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய அல்-கொய்தா தலைவரான ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் அளித்து, பாகிஸ்தான் அரசு பாதுகாப்பும் அளித்தது என்று கூறியுள்ள சசிதரூர், உலகில் பாதுகாக்க வேண்டிய அமைதி, ஜனநாயகம், சுதந்திரம் என அனைத்து மதிப்புகளையும், இந்தியா பாதுகாக்கிறது என்றும், மாறாக பாகிஸ்தான் வெறுப்பு, கொலை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை கோபுரம், மும்பை, புல்வாமா, உரி, பஹல்காம் வரை மீண்டும் மீண்டும், ஒன்றன்பின் ஒன்றாக பயங்கரவாதத் தாக்குதல்கள், பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளையும் பாகிஸ்தான் வளர்த்து வருகிறது என்பதற்கான சான்றுகள் என்று கூறிய அபிஷேக் பானர்ஜி, பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு ஆதரவும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதாகும் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
பாகிஸ்தானுடனான உறவுகளைச் சரிசெய்ய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடங்கி பிரதமர் மோடி வரை, முயற்சி செய்தால், மத பிரிவினையைத் தூண்டும் வகையில் இந்தியா மீது பாகிஸ்தான் பயங்கர வாத தாக்குதல்களை நடத்துவதாகக் கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நீண்ட காலப் போரை எடுத்துரைத்த சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே, ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் பாதுகாப்பு அணுகுமுறையில் ஒரு தீர்க்கமான மாற்றமாகும் என்று விளக்கியுள்ளார்.