எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸின் ஒன்பதாவது ஸ்டார்ஷிப் சோதனையும் தோல்வியில் முடிந்துள்ளது. விண்ணில் செலுத்தப்பட்ட 30 நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து, இந்திய பெருங்கடலில் விழுந்து நொறுங்கியது. எரிபொருள் கசிவே இந்த தோல்விக்கு முக்கிய காரணம் என ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
47வது அமெரிக்க அதிபரான ட்ரம்ப், தனது பதவியேற்பு விழா உரையில், செவ்வாய்க்கிரகத்தில் அமெரிக்காவின் கொடி ஏற்றப்படும் என்று தெரிவித்திருந்தார். அது உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்கின் கனவாகும். நீண்ட காலமாகச் செவ்வாய் கிரகப் பயணத்தைத் தனது இலட்சியமாக எலான் மஸ்க் கொண்டுள்ளார். தனது டிராகன் விண்கலத்தை 2018ம் ஆண்டிலேயே அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக 2016ம் ஆண்டு அறிவித்தார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகுத் தனது நிறுவனம் செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்களைத் தரையிறக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். 2026ம் ஆண்டின் இறுதியில், பிரமாண்டமான ஸ்டார்ஷிப் செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லும் என்றும், அதனுடன் டெஸ்லாவின் மனித ரோபோ ஆப்டிமஸும் அனுப்பப்படும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
திட்டமிட்டப்படி எல்லாம் சரியாக நடந்தால், 2029ம் ஆண்டிலே செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் நடக்கலாம் என்றும், எப்படியும் 2031ம் ஆண்டு இதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். எலான் மஸ்கின் இந்த செவ்வாய்க் கிரக கனவுக்கு, மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப், மிகவும் முக்கியமானது.
விண்வெளி பயணத்தை மிகவும் செலவு குறைந்ததாகவும், திறமையாகவும் மாற்றும் ஸ்டார்ஷிப் இரண்டு நிலைகளையும் சேர்த்து 121 மீட்டர் உயரம் கொண்டதாகும். இது சுதந்திர தேவி சிலையை விட 90 அடி உயரமானது.
அதன் சூப்பர் ஹெவி பூஸ்டர் 74.3 மெகா நியூட்டன்கள் உந்துவிசையை உற்பத்தி செய்கிறது, இது அப்பல்லோ பயணங்களின்போது பயன்படுத்தப்பட்ட சாட்டர்ன் V ராக்கெட்டுகளை விட இரண்டு மடங்கு சக்தி வாய்ந்ததாகும். இந்த பெரிய ராக்கெட், இறுதியில் முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆழமான விண்வெளி ஆய்வுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்டார்ஷிப், சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பாலும் விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. தனியார் விண்வெளி நிறுவனங்களில் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதன்மையானதாக உள்ளது.
இந்நிலையில், மீண்டும் விண்வெளி வீரர்களைச் சந்திரனுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட ஆர்ட்டெமிஸ்-3 திட்டத்துக்காக ஸ்டார்ஷிப்பை நாசா தேர்வு செய்தது. ஸ்டார் ஷிப் நம்பகமானது, பாதுகாப்பானது மற்றும் சிக்கலான சுற்றுப்பாதையில் எரிபொருள் நிரப்பும் திறன் கொண்டது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இருந்தது.
கடந்த ஜனவரியில் நடந்த 7வது சோதனையும் மார்ச்சில் நடந்த 8வது சோதனையும் தோல்வியில் முடிந்தது. தோல்விகளைக் கண்டு துவளாமல், ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார்ஷிப்பின் 9வது சோதனையை மேற்கொண்டது. குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் சென்று, மீண்டும் பத்திரமாகப் பூமிக்குத் திரும்பும் திறனை நிரூபிக்கும் வகையில் சோதனை அமைக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஸ்டார் ஸ்பேசில் இருந்து புறப்பட்ட ராக்கெட் அரைமணி நேரத்தில், ராக்கெட்டு உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. கட்டுப்பாட்டை இழந்த, தாறு மாறாக சுழலத் தொடங்கிய ராக்கெட், விழுந்து நொறுங்கியது.
இந்த ஆண்டில் ஸ்டார் ஷிப் தோல்வி அடைவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கெனவே, ஸ்டார் ஷிப்பின் சோதனை தோல்விகள் காரணமாக, 2026 ஆம் ஆண்டு வரை ஆர்ட்டெமிஸ்-3 திட்டத்தைத் தள்ளி வைத்த நாசா, இப்போது அதை 2027 ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைத்துள்ளது.
“வேகமாகத் தோல்வி, வேகமாகக் கற்றுக்கொள்ள உதவும் என்ற அணுகுமுறையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ள நிலையில், செவ்வாய்க் கிரகப் பயணத் திட்டத்தில் எலான் மஸ்க்கின் நம்பிக்கை அசைக்க முடியாததாக உள்ளது.