திருவேற்காடு நகராட்சி மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கோலடி கிராமத்தில் பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் தமிழக அரசும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் முயற்சி செய்துவருவதாகப் புகார் எழுந்துள்ளது. விளையாட்டுத்திடலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாக மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கை குறித்தும் மக்களின் எதிர்ப்பு குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
திருவேற்காடு நகராட்சியில் எந்த ஒரு முக்கியமான விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும் என்றாலும் அவர்கள் நாடக்கூடிய ஒரே மைதானம் இந்த கோலடி மைதானம் தான். எண்ணற்ற விளையாட்டு வீரர்களை உருவாக்கிய அத்தகைய விளையாட்டு மைதானத்தைக் கையகப்படுத்தியிருக்கும் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை, கடும் எதிர்ப்பை மீறியும் அங்குக் கழிவுநீர் சுத்திகரித்து நிலையத்தை அமைக்க முயற்சிப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
13 ஏக்கர் பரப்பளவில் ஏராளமான விளையாட்டு வீரர்களை உருவாக்கிய இந்த மைதானத்திற்குள் தற்போது யாரும் நுழைய முடியாத அளவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதே விளையாட்டு மைதானத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முயன்ற போது எதிர்க்கட்சியாக இருந்து எதிர்ப்பு தெரிவித்த திமுக, ஆளுங்கட்சியான பின்பு அதனை அமைத்தே தீருவோம் என்ற பிடிவாதத்துடன் செயல்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பட்டியலின மக்கள் அதிகளவு வசிக்கும் இப்பகுதியில் வளர்ச்சித் திட்டங்கள் எதையும் கொண்டுவராத திமுக அரசு, அதற்கு மாறாக அவர்கள் வசிக்கும் பகுதியில் திட்டமிட்டு இதுபோன்ற உடல்நிலைக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் திட்டங்களை ஊருக்கு நடுவில் கொண்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
மைதானத்திற்கு ஒருபுறம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளியும், மறுபுறம் திருவேற்காடு நகராட்சியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கோலடி ஏரியும் அமைந்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்லாமல் நிலத்தடி நீருக்கும் ஆபத்து விளைவிக்கும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடினால், காவல்துறை வலுக்கட்டாயமாகக் கைது செய்வதாகவும் பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊரின் நடுப்பகுதியில் திமுக அரசு கொண்டுவர முயற்சிப்பதின் பின்னணி அப்பகுதி மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.