சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை சுங்கத் தீர்வை மத்திய அரசு 10 சதவீதம் குறைத்துள்ளது.
உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையை குறைக்கவும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைப் பாதுகாக்கவும் சுங்கத்தீர்வை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி சதவீத குறைப்பு நடவடிக்கை, உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, இந்த எண்ணெய்கள் மீதான சுங்கத்தீர்வை 20 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 10 சதவீதமாகக் குறைத்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது
மேலும், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மீதான சுங்கத் தீர்வையில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் மத்திய நிதி அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியா, தனது தேவையில் 50 சதவீத சமையல் எண்ணெய்யை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.