நக்சல் ஒழிப்பிற்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தமிழகத்திற்கு ஆபத்து என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் கடந்த 21-ம் தேதி நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பாக செயல்பட்ட நம்பாலா கேசவராவ் உள்பட 27 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் நக்சல்களை ஆதரித்து நாளை மறுதினம் ராஜரத்தினம் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தக் கம்யூனிஸ்ட் அமைப்புகள் அனுமதி கோரியதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நக்சல் இயக்கம் என்பது கம்யூனிஸ்ட்களின் துணை அமைப்புதான் என்பதை இதன்மூலம் தெள்ளத் தெளிவாக அறிய முடியும் எனக் கூறியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், தமிழகத்தில் மக்கள் கலை இலக்கிய கழகம், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் நகர்ப்புற நக்சல்களாக மாறி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கம்யூனிஸ்ட்களின் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் நக்சல் ஆதரவு நிலையை ஏற்படுத்த அரசே துணைபோகும் ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் காடேஸ்வரா சுப்ப்பிரமணியம் எச்சரித்துள்ளார்.