ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியாவின் ராணுவ பலம் உலகுக்கு உணர்த்தப்பட்டுள்ள நிலையில் தேசப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ‘அக்னி 6’ ஏவுகணையை நம்நாடு உருவாக்கி வருகிறது. அதைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
உலகின் சக்திவாய்ந்த வல்லரசாக உருவெடுக்கும் பயணத்தில் பொருளாதாரம் மற்றும் ராஜாங்க ரீதியிலான உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி தேசப் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளிலும் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
பாகிஸ்தான் மற்றும் சீனா உடனான எல்லைப் பிரச்சனைகளைச் சமாளிக்கத் தேவையான ராணுவத் தளவாடங்களை இந்தியா உருவாக்கி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள ‘அக்னி 5’ ஏவுகணை இந்திய ராணுவத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி 5’ ஏவுகணை இந்தியாவின் பெருமையாகக் கருதப்படுகிறது. அணு ஆயுதங்களைச் சுமந்துகொண்டு ஏழாயிரம் கிலோ மீட்டர் பறந்து சென்று தாக்கும் வல்லமை ‘அக்னி 5’-க்கு உண்டு. இதைவைத்து சீனத் தலைநகர் பீஜிங்கைக்கூட தாக்க முடியும்.
‘அக்னி 1’ மற்றும் ‘அக்னி 2’ ஏவுகணைகள் பாகிஸ்தானைச் சமாளிப்பதற்காகத் தயாரிக்கப்பட்டவை. அதாவது குறைந்த தூரத்தில் இருக்கும் இலக்குகளைத் தாக்குவதற்காக உருவாக்கப்பட்டவை. ஆனால் ‘அக்னி 5’ சீனாவுக்காகவே SPECIAL-ஆக தயாரிக்கப்பட்டது. மிக விரைவாக இலக்கைச் சென்றடையும் திறன் கொண்ட ‘அக்னி 5’ ஏவுகணையை இடைமறிப்பது கடினம்.
மேலும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று வெவ்வேறு இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பல்வேறு இடங்களைத் தாக்க ஒரேயொரு ‘அக்னி 5’ ஏவுகணையே போதுமானது.
அந்நாடு உருவாக்கியுள்ள ‘ஷாஹீன் 3’ ஏவுகணையுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ‘அக்னி 5’ அதிக திறன்களைக் கொண்டது. சீனாவின் ‘DONGFENG 41’ ஏவுகணைக்கும் கடும் சவாலைக் கொடுக்கக் கூடியது.
தேசப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ‘அக்னி 6’ ஏவுகணையை உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. 8,000 முதல் 12,000 கிலோ மீட்டர் வரை பறந்து சென்று தாக்கும் திறனோடு தயாரிக்கப்படும் ‘அக்னி 6’ ஏவுகணையில் ஒரே நேரத்தில் 10 அணு ஆயுதங்களை இணைத்து அனுப்ப முடியும். இதன்மூலம் 10 வெவ்வேறு இலக்குகளை ஒரே சமயத்தில் தாக்க முடியும்.
இந்தியாவிலிருந்தபடியே பாகிஸ்தான், சீனா மட்டுமின்றி சில ஐரோப்பிய நாடுகளையும் ஆப்ரிக்காவையும்கூட தாக்க முடியும் என்றால் ‘அக்னி 6’ ஏவுகணையின் சக்தி எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நிலத்தில் இருந்தும் நீர்மூழ்கி கப்பலில் இருந்தும் ‘அக்னி 6’ ஏவுகணையை ஏவ முடியும். இது பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா மாறும்.
‘அக்னி 5’ மற்றும் ‘அக்னி 6’-க்கு போட்டியாக ‘ABABEEL’ என்னும் ஏவுகணையை உருவாக்கியிருப்பதாகப் பாகிஸ்தான் கூறினாலும் அதன் சக்தி இதுவரை மெய்ப்பிக்கப்படவில்லை. அதேபோல் இந்தியாவைச் சமாளிக்க புதிய ஏவுகணைகளைத் தயாரிக்க வேண்டிய கட்டாயத்துக்குச் சீனா ஆளாகியுள்ளது.
பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே ‘அக்னி 6’ ஏவுகணையைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியும். அதற்கான வேலைகளில் DRDO ஈடுபட்டுள்ளது. தற்காப்புக்காகவும் சீண்ட நினைக்கும் எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காகவும் தான் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணைகளை இந்தியா உருவாக்குகிறது.
அண்டை நாடுகளுடன் அமைதியான உறவைப் பேணவே இந்தியா விரும்புகிறது. போரின் போது அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தமாட்டோம் என்பதே இந்தியாவின் கொள்கை. எனவே நாம் பூப்பாதையை தேர்வு செய்ய வேண்டுமா? அல்லது சிங்கப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா? என்பது எதிரிகளின் செயல்பாட்டைப் பொறுத்தே அமையும்.