முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையையொட்டி மதுரை பந்தல் குடியில் கழிவுநீர் கால்வாயை 1 கிலோ மீட்டர் தூரத்துக்குத் திரையிட்டு மறைத்த அரசு அதிகாரிகளின் செயல் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பந்தல் குடி கால்வாயில் பல ஆண்டுகளாகக் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையையொட்டி, சாலையோரமுள்ள பந்தல்குடி கழிவுநீர் கால்வாயை 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிகாரிகள் அவசர அவசரமாகத் திரையிட்டு மறைத்தனர்.
கழிவுநீர் கால்வாயை முதலமைச்சரின் பார்வையிலிருந்து மறைக்கும் அதிகாரிகளின் முயற்சியால், திரையின் அருகே நிறுத்தி வைத்திருந்த வாகனங்களைக் கூட எடுக்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து மீண்டும் திரைகளை அகற்றும் பணி நடைபெற்றது. நீண்ட நாட்களாகக் கழிவுநீர் கால்வாயின் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைக்கக் கோரியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.