கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் நாகர்கோவில் பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், தங்கள் குடும்பத்துடன் மீண்டும் பணிபுரியும் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், குடும்பத்துடன் முன்பதிவு செய்தவர்களும், முன்பதிவு செய்யாதவர்களும் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கான பேருந்துகளில் ஏற காத்திருந்தனர்.
இதனால் பேருந்து நிலையம் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், கூட்ட நெரிசலை சமாளிக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திருப்பூர் கடை வீதிகளில் பள்ளி உபகரணங்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தங்கள் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பேக், நோட் புக் மற்றும் சீருடைகள் உள்ளிட்ட பள்ளி உபகரணங்களை வாங்க பெற்றோர் ஆர்வம் காட்டினர். இதனால் அங்குள்ள கடை வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. அதேபோல, சொந்த ஊர் சென்ற ஏராளமான மக்கள் திருப்பூருக்கு திரும்புவதால் மத்திய பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது