தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான இறுதித்தேர்வு மற்றும் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. ஜூன் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
சென்னையில், பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதேபோன்று, ஈரோடு அரசு தொடக்கப் பள்ளியில் வாழை மரம் தோரணம் அமைத்து மேளதாளம் முழங்க மாணவர்கள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். மேலும், முதல் வகுப்பில் இணைந்த மாணவ, மாணவியர்களுக்கு ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து தங்களது சொந்த செலவில் வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்கினர்.
சேலம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். அதே நேரத்தில், நர்சரி மற்றும் தொடக்க பள்ளிகளுக்கு வந்த குழந்தைகள் பெற்றோரை பிரிந்து செல்ல மனமில்லாமல் அழுது அடம் பிடித்து சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறியது.
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை புரிந்த மாணவிகளை இனிப்பு மற்றும் மலர்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். ஒரு வாரத்துக்கு முன்னதாகவே பள்ளிகளை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக பள்ளி தலைமை ஆசிரியை தெரிவித்தார்.