கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில் தம்பியின் வீட்டைச் சுற்றி அண்ணனே அடியாட்களைக்கொண்டு பள்ளம் தோண்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தை அடுத்த பரிகம் பகுதியைச் சேர்ந்த கமலசேகரன் மற்றும் ரமேஷ் ஆகிய சகோதரர்கள் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது.
இருவரும் கடந்த 2009-ம் ஆண்டு வருவாய்த்துறை மூலம் அளவீடு செய்து நிலத்தைப் பங்கிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தம்பி ரமேஷ் தனது பங்கு நிலத்தில் வீடு கட்டி சுற்றுச்சுவர் எழுப்பிய நிலையில், தம்பியின் இடத்தில் தனது பங்கு உள்ளதாகக்கூறி அண்ணன் கமலசேகரன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், ஜேசிபி வாகனம் மற்றும் அடியாட்களுடன் வந்த அவர், தம்பியான ரமேஷின் வீட்டுச் சுற்றுச்சுவரை இடித்துவிட்டு அவரது வீட்டைச் சுற்றி பள்ளம் பறித்துள்ளார்.
போலீசாரிடம் புகார் அளித்தும் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ரமேஷ் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.