அண்ணா பல்கலைக்கழக ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மாணவியை மிரட்டுவதற்காகச் சார் என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தியதாக காவல்துறை நிரூபித்துள்ளது எனச் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 207 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், நீதிபதி ராஜலட்சுமி பல்வேறு விஷயங்களைச் சுட்டிக்காட்டி உள்ளார்.
அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பை பெற்று, கனவுகளுடன் வலம் வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மாணவியை மிரட்டுவதற்காகச் சார் என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தியதாக காவல்துறை நிரூபித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஞானசேகரன், பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்தது, ஒட்டு மொத்த சமூகத்தையும் அவமதிப்பு செய்துள்ளதை வெளிக்காட்டுவதாகத் தெரிவித்த நீதிபதி, இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ, அனுமதிக்கவோ முடியாது என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது எனவும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.