கொலை வழக்கில் கைதான நபர்களின் உறவினர்கள் மிரட்டல் விடுப்பதாகக்கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பாதுகாப்பு கோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
பரமத்தி வேலூர் அடுத்த செருக்கலை கிராமத்தைச் சேர்ந்த தாமரை என்பவர், தனது குடும்பத்துடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமாவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
தனது உறவினரான அண்ணாதுரை என்பவர், முன்விரோதம் காரணமாகக் கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டதாகவும், இந்த வழக்கில் அசோக் குமார், சின்னுசாமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், வழக்கை வாபஸ் பெறக்கோரி இருவரின் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
எனவே, உரிய பாதுகாப்பு வழங்குவதுடன், கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.