மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றபோது மத்திய அரசு தொடர்பான பேனர் அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் தரையில் அமர்ந்து பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது, மத்திய அரசின் பேனர் அகற்றப்பட்டதற்குக் காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.