இந்தியாவில் கோவிட்-19 தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்த கொரொனா வைரஸ் மிகவும் கடுமையானது அல்ல என்று கூறும் மருத்துவர்கள், அதற்காகப் புதிதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2019ம் ஆண்டு உலகையே புரட்டி போட்ட கோவிட் -19 வைரஸ், அதன் பிறகு புதுப்புது வடிவங்களில் இன்னமும் மக்களைப் பயமுறுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம், உலக அளவில் SARS-CoV-2 வகை தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. மேலும், தென்கிழக்கு ஆசியா ,மத்திய தரைக் கடல் மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் இந்த புதிய வகை நோய்த் தொற்று பரவல் அதிகமாகக் காணப் படுவதாகவும் கூறியிருந்தது.
கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியிருந்தது. இதுவரை கேரளாவில் தான் அதிகமானோர் கொரொனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். கேரளாவில் கொரொனாவால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 1,435 ஆகும். அடுத்தப் படியாக ,மகாராஷ்டிராவில் 506 பேரும், குஜராத்தில் 338 பேரும்,டெல்லியில் 483 பேரும், கர்னாடகாவில் 253 பேரும்,தமிழகத்தில் 189 பேரும் கொரொனா தொற்றுக்குச் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒரே நாளில் அதிகப் பட்சமாக குஜராத்தில் புதிதாக 59 பேர் கொரொனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதற்கடுத்த படியாகக் கர்நாடகத்தில் 58 பேரும், மேற்குவங்கத்தில் 41 பேரும், தமிழகத்தில் 26 பேரும், கொரொனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
நாட்டில் 4026 பேர் கொரொனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், கொரோனாவின் NB.1.8.1, JN.1 LF.7, XFG ஆகிய ஒமிக்ரான் வகை வைரஸ்களே இப்போதைய பரவலுக்கு முக்கியக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. தற்போது பரவும் கொரொனா வைரஸ் மிகவும் கடுமையானது அல்ல என்று கூறும் மருத்துவர்கள், அதற்காகப் புதிதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே கொரொனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட காரணத்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகவே இருக்கும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கொரொனா வைரஸுக்கு எதிரான நோய் சக்தியுடன் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாகவே, தடுப்பூசி மருந்தின் வீரியம் குறைந்துவிட்டாலும், குறிப்பிட்ட வைரஸை எப்படி எதிர்த்துப் போராடுவது என்பதைத் தடுப்பூசி போடப்பட்ட உடல் மறக்காது என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ள நிலையில், முக கவசம் அணிவது போன்ற அடிப்படை பாதுகாப்பு பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவது நல்லது என்று பரிந்துரைத்துள்ளனர்.
சளி, இருமல், தொண்டை வலி, மூச்சுத் திணறல், தலைவலி, உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் முகக் கவசம் அணிந்து கொள்ளச் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் கொரோனா பரவல் குறித்த அச்சம் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் கூறியுள்ளார்.