தூத்துக்குடி பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை அமல்படுத்த கோரி 5 மணி நேரம் நடந்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் விலக்கி கொண்டனர்.
தூத்துக்குடி – புதூர் – பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை அமல்படுத்த கோரி லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது 100க்கும் மேற்பட்ட லாரிகளை சுங்கச்சாவடியில் நிறுத்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.
இது குறித்துத் தகவலறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைத்தவுடன் சுங்கக்கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படும் என எழுத்து மூலம் வாக்குறுதி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து 5 மணி நேரம் நடந்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்த லாரி உரிமையாளர்கள், சுங்கச்சாவடியில் நிறுத்தி வைத்திருந்த லாரிகளை எடுத்துச் சென்றனர்.