கோவையில் நடைபெறும் 9-வது புத்தக கண்காட்சியை பள்ளி மாணவர்கள் வந்து காண ஏதுவாக, இலவச பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சிறு தொழில் சங்கம் இணைந்து நடத்தும் 9-வது புத்தக கண்காட்சி, கொடிசியா மைதானத்தில் உள்ள தொழிற்காட்சி வளாகத்தில் வரும் ஜூலை 18-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த புத்தகக் கண்காட்சியில் 280-க்கும் மேற்பட்ட அரங்குகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கும்,விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு வர அனுமதி இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான லோகோ வெளியீட்டு நிகழ்வு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார், கொடிசியா மைதான நிர்வாகிகள் இணைந்து புத்தகக் கண்காட்சிக்கான லோகோவை வெளியிட்டனர்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் பவன் குமார், இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு ஒரு லட்சத்திற்கு மேல் பார்வையாளர்களை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.