உதகை அருகே அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என பள்ளி சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வரும் நிலையில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அந்தந்த பள்ளி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக உதகை அருகேயுள்ள கீளூரில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை பள்ளியில் புதிதாக 1-ம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு, வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் எனப் பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அப்பள்ளி ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்களும் இணைந்து இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், பள்ளியில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதியை மேம்படுத்தப் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.