ஆண்டிபட்டி அருகே மலையடிவாரங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து தென்ன மரங்களை யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும், சூரிய ஒளி மின்வேலி அமைத்து விளைநிலங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தாழையூத்து மலையடிவாரத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
தேனி – மதுரை மாவட்டங்களை இணைக்கும் எல்லையில் அமைந்துள்ள தாழையூத்து பகுதியில் கோடைக்காலங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் யானைகள், விவசாய தோட்டங்களில் புகுந்து தென்னை மரங்களைச் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
யானைகள் நடமாட்டம் காரணமாக இரவில் தோட்டத்தில் காவல் பணி மேற்கொள்ளக் கூலித் தொழிலாளர்கள் வருவதில்லை எனவும் கூறியுள்ளனர்.
மேலும், சூரிய ஒளி மின்வேலி அமைத்துத் தருமாறு கடந்த 2 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருவதாகக் கூறியுள்ள விவசாயிகள், சூரியஒளி மின்வேலி அமைத்து விளைநிலங்களுக்கும் விவசாயிகளின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.