அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தகப் போரில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் சீனா, பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் வாகனத் துறைகளில் பயன்படுத்தப்படும் ஏழு அரிய வகை தாதுக்கள் மற்றும் காந்தங்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், உலக நாடுகளுக்கு எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படும்? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1992ம் ஆண்டு, மறைந்த சீனத் தலைவர் டெங் சியாவோபிங், மத்திய கிழக்கில் எண்ணெய் உள்ளது, சீனாவில் அரிய மண் வளம் உள்ளது என்று பெருமிதமாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சீனா, அரிய தாதுக்கள் சுரங்கம் மற்றும் அதன் செயலாக்கத் திறன்களை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்தது.
அரிய மண் தாதுக்கள் என்றால் சுரங்கம், சுத்திகரிப்பு முதல் காந்தங்கள் போன்ற முடிக்கப்பட்ட பொருட்களின் உற்பத்தி வரை முழு விநியோகச் சங்கிலியிலும் ஏகபோக ராஜாவாக சீனா தன்னை நிலைநிறுத்தியது.
அரிய தாதுக்கள் உற்பத்தியில் சுமார் 61 சதவீதத்தை வைத்திருக்கும் சீனா, அவற்றின் செயலாக்கத்தில் 99 சதவீதத்தைத் தன்வசம் வைத்துள்ளது. குறிப்பாக, உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் அனைத்து அரிய தாதுக்கள் எல்லாம் சீனாவில் தான் சுத்திகரிக்கப்படுகின்றன.
எந்தெந்த நாடுகள், எந்தெந்த நிறுவனங்கள், எவ்வளவு அரிய தாதுக்களின் விநியோகங்களைப் பெறலாம் அல்லது பெறக்கூடாது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் சீனாவுக்கு உள்ளது
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப், அனைத்து உலக நாடுகள் மீது பரஸ்பர வரி விதித்தார். குறிப்பாகச் சீனா மீது மிக அதிகமான இறக்குமதி வரிகளை விதித்தார்.
ட்ரம்ப்புக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஏழு அரிய தாதுக்களின் ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகளைச் சீனா விதித்துள்ளது. அனைத்து நிறுவனங்களும் அரிய தாதுக்கள் மற்றும் காந்தங்களை நாட்டிற்கு வெளியே அனுப்பச் சிறப்பு ஏற்றுமதி உரிமங்களைப் பெற வேண்டும் என்று சீன வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் புதிய ஏற்றுமதி விதிகள், அரிய தாதுக்கள் எங்கு, எப்படிப் பயன்படுத்தப்படும் என்பதை வாங்குபவர்களிடம் வெளிப்படுத்தச் சொல்கிறது. இது உலக அளவில் ஒவ்வொரு தொழிலும் எவ்வாறு செயல்படுகிறது ? என்பதைச் சீனா அறிந்து கொள்ள உதவுகிறது.
(samarium) சமாரியம், (gadolinium) காடோலினியம், (terbium) டெர்பியம், (dysprosium) டிஸ்ப்ரோசியம், (lutetium) லுடீடியம், (scandium) ஸ்காண்டியம் மற்றும் (yttrium) யட்ரியம் ஆகிய அரிய தாதுக்கள் மற்றும் காந்தத்தை ஏற்றுமதி செய்ய விதித்துள்ள கட்டுப்பாடுகள் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை வெகுவாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
(dysprosium) டிஸ்ப்ரோசியத்தின் காந்த உணர்திறன் கார் போன்ற வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. (gadolinium) காடோலினியம் அணுஉலைககளிலும் சில மருத்துவ கருவிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. (lutetium) லுடீடியம் லேசர் அறுவை சிகிச்சை, எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களில் பயன்படுத்தப் படுகிறது. (samarium) சமாரியம் தனிப்பட்ட மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. (scandium) ஸ்காண்டியம் மற்றும் அதன் உலோக கலவைகள் போர் விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன. (terbium) டெர்பியம் மின்னணு சாதனங்களில் உள்ள விளக்குகளில் பயன்படுத்தப் படுகிறது. (yttrium) யிட்ரியம் புற்று நோய் சிகிச்சைகளில் பயன்படுத்தப் படுகிறது.
அரிய தாதுக்களின் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சிறப்பு ஏற்றுமதி உரிமம் பெறவேண்டும் என்ற சீனா விதித்துள்ள புதிய செயல் முறையின் மூலம், உலகமெங்கும் விநியோக சங்கிலி பாதிப்படையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தடைப்பட்ட ஏற்றுமதி உரிமங்களை விரைவுபடுத்துவதற்காக இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன. இதற்காக சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மின்சார கார்கள் உற்பத்திக்குத் தேவையான காந்தங்களில் 90 சதவீதம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் மின்சார கார் உற்பத்தி வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், காந்தங்களின் ஏற்றுமதிக்குச் சீனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், டாடா, மஹிந்திரா, மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள் நேரடியாகப் பாதிக்கப்படுகிறது
உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையான இந்தியாவின் கார் உற்பத்தியாளர்கள் தங்கள் விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்வதில் அமெரிக்கா பின்தங்கியுள்ளது. அமெரிக்காவை விட ஆறு மடங்கு வேகமாக மேம்பட்ட ஆயுத அமைப்புகள் மற்றும் இராணுவ தளவாடங்களைச் சீனா உற்பத்தி செய்து வருகிறது.
இந்நிலையில், அரிய வகை தாதுகள் ஏற்றுமதிக்குச் சீனாவின் புதிய விதிமுறை, அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான சீனா-அமெரிக்கா வர்த்தக போர், மொத்த உலக பொருளாதாரத்தையே பாதிக்கிறது.
எனவே, விரைவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.