பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விழாவின்போது ஆயிரத்து 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாகவும், எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் கர்நாடக அரசு விளக்கம் அளித்தது.
மேலும், வெற்றி விழாவில் பங்கேற்க அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டதால் இரண்டரை லட்சம் பேர் மைதானத்தில் திரண்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் வழக்கின் விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதனிடையே இந்த விவகாரத்தில் ஆர்.சி.பி. நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த DNA எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மீதும் பெங்களூரு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதற்கிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு ஆர்.சி.பி. அணி தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான எக்ஸ் தளப் பதிவில், பெங்களூருவில் நேற்று நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ரசிகர்களுக்கு உதவ RCB கேர்ஸ் என்ற நிதி திரட்டும் அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும் ஆர்.சி.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.