அதிமுக நிர்வாகி ஆற்றல் அசோக்குமார் மனைவி காலமான நிலையில், அவரது குடும்பத்தினருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதியின் மகளும், அதிமுக அம்மா பேரவையின் மாநில துணை செயலாளருமான ஆற்றல் அசோக்குமாரின் மனைவியுமான கருணாம்பிகா உடல்நலக் குறைவால் காலமானார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையம் பகுதியில் உள்ள இல்லத்திற்குச் சென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஆற்றல் அசோக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது அவருடன் பாஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் முருகானந்தம், மாவட்டத் தலைவர் எஸ்.எம்.செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து கருணாம்பிகாவின் உருவப்படத்திற்கு நயினார் நாகேந்திரன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.