நீட் முதுநிலை தேர்வை ஆகஸ்ட் 3ம் தேதி ஒரே கட்டமாக நடத்தத் தேர்வு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வரும் 15ம் தேதி நீட் முதுநிலை தேர்வு 2 கட்டமாக நடத்தப்படும் என்ற தேசிய தேர்வுகள் வாரியத்தின் அறிவிப்புக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
மேலும் மருத்துவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமெனவும் , இதில் மருத்துவ வாரியம் தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடாது எனவும் முன்பே தீர்ப்பளித்து இருந்தது.
அதன் அடிப்படையில் கூடுதலாகத் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதால் தேர்வை ஒத்தி வைப்பதாகத் தேர்வு வாரியம் அறிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஒரே கட்டமாகத் தேர்வு நடத்தக் கூடுதலாக 450 மையங்கள் தேவைப்படும் என்பதால் கால அவகாசம் வேண்டும் எனத் தேர்வு வாரியம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள் நீட் முதுநிலைத் தேர்வை ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தலாம் எனவும் 3ம் தேதிக்குப் பின் கூடுதலாகக் கால அவகாசம் வழங்கப்படாது எனவும் தீர்ப்பளித்தனர்.