நெல்லையில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் போதைப்பொருட்கள் புழக்கம் குறித்து போலீசார் மற்றும் சிறைத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
பாளையங்கோட்டை சிறைச்சாலையில் ஆயிரத்து 600 கைதிகள் உள்ள நிலையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாடு உள்ளனவா என்பது குறித்து சோதனை மேற்கொள்ள மாநகர காவல்துறை உத்தரவிட்டது.
அதன் பேரில் முன்னறிவிப்பு இல்லாமல் அங்குச் சென்ற அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 40-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 40க்கும் மேற்பட்ட சிறைக்காவலர்கள் இணைந்து நடத்திய இந்த சோதனையில் அதிகாலை உறங்கிக்கொண்டு இருந்த கைதிகளை எழுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் எந்த ஒரு போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை எனவும் சிறைச்சாலையில் சட்டவிரோத செயலை தடுக்கவே சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.