பெங்களூரு கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சர்ச்சை கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகிகளின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெங்களூரு கூட்டநெரிசல் விவகாரத்தில், பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வது போல அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து கூறியிருப்பதாகக் கடுமையாக விமர்சித்தார்.
மதுரையில் வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு வெற்றி மாநாடாக நடைபெறும் என்றும் அவர் கூறினார். முருக பக்தர்களுக்கு திமுக அரசு தொடர்ச்சியாக பல்வேறு இடையூறை ஏற்படுத்தி வருவதாகக் கூறிய அவர், திமுக தோல்வி பயத்தில் உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், மக்களின் செல்வாக்கை திமுக இழந்து வருவதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.