மகாராஷ்டிராவின் வாக்காளர் பட்டியல்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், சட்டத்தின் ஆட்சியை அவமதிப்பதாகும் என ராகுல் காந்திக்குத் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிரா உத்தியைப் பின்பற்றி பீகார் தேர்தலில் முறைகேடு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி பேசினார்.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்குக் கடந்த டிசம்பர் 24-ம் தேதியே காங்கிரஸ் கட்சிக்குப் பதிலளித்ததாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற பிரச்சனைகளை மீண்டும் மீண்டும் எழுப்பும்போது உண்மைகள் அனைத்தும் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தவறான தகவல்களைப் பரப்புவது தேர்தல்களின்போது அயராது பணியாற்றும் லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களை அவமதிப்பதாகவும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், வாக்காளர்கள் தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்காத தேர்தல்களுக்குப் பின்னர், தேர்தல் ஆணையம் சமரசம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அவதூறு பரப்ப முயற்சிப்பது முற்றிலும் அபத்தமானது எனவும் தெரிவித்துள்ளது.