ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்திய சொல்லரங்கம் நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள், பாதுகாப்பு வியூக நிபுணர்கள் பங்கேற்று கலந்துரையாடினர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதனால் அச்சமடைந்த பாகிஸ்தான் அரசு இரு நாடுகளுக்கிடையே சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள இந்தியாவிடம் பணிந்து கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ மூலம் உலகிற்கு இந்தியா சொன்ன செய்தி ராணுவ வெற்றியா? ராஜதந்திர வெற்றியா?’ என்ற தலைப்பில், சென்னை அரும்பாக்கத்திலுள்ள டிஜி வைஷ்ணவா கல்லூரியில், தமிழ் ஜனம் தொலைக்காட்சி சொல்லரங்கம் நிகழ்ச்சி நடத்தியது.
இதில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளான மேஜர் இந்திரபாலன், மேஜர் மதன், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான குரூப் கேப்டன் நக்கீரன் பரணன், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியான கமாண்டர் ராகுல் சீத்தாராமன், புவிசார் அரசியல் மற்றும் வியூகவியல் நிபுணர்களான முனைவர் சேஷாத்ரி சாரி மற்றும் பிரியதர்ஷினி ராகுல் ஆகியோர் பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் இதில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி தொடங்கியவுடன் தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் தில்லை வரவேற்புரை வழங்கிய பின், நிர்வாக இயக்குனர் மது சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூருக்கான காரணம் குறித்தும் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் குறித்தும் பவர் பாயிண்ட் மூலம் பார்வையாளர்களுக்கு மேஜர் மதன் விளக்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியின் முதல் அமர்வில், பேசிய ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் இந்திரபாலன், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் வலிமை குறித்து எடுத்துரைத்தார். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்ததாக கூறினார்.
பின்னர் பேசிய ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி நக்கீரன் பரணன், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு இந்திய செயற்கைக்கோள்களே பெரிதும் உதவியதாக தெரிவித்தார்.
பின்னர் பேசிய ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி கமாண்டர் ராகுல் சீத்தாராமன், 96 மணி நேரத்தில் 36 போர்க் கப்பல்கள், வீரர்களுடன் கடலில் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய, புவிசார் அரசியல் மற்றும் வியூகவியல் நிபுணரான முனைவர் சேஷாத்ரி சாரி, 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு 80 சதவீத ராணுவ தளவாடங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய, புவிசார் அரசியல் நிபுணர் பிரியதர்ஷினி ராகுல், சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்து எடுத்துரைத்தார்.
ஆப்ரேசன் சிந்தூர் தொடர்பாக பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் துறைசார்ந்த வல்லுநர்கள் விரிவான விளக்கத்தை அளித்தனர். தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்திய சொல்லரங்கம் நிகழ்ச்சியின் மூலம் பாதுகாப்புத்துறை சார்ந்து ஏராளமான தகவல்களை நேரடியாக அறிந்து கொள்ள முடிந்ததாக நிகழ்வில் பார்வையாளர்களாக பங்கேற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.