கேரளாவின் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் 275 ஆண்டுகளுக்கு பின், குடமுழுக்கு வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயில் மிக முக்கியமானதாகும். வைணவ தலங்களில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இக்கோயிலின் புனரமைப்பு பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.
மூலவர் ராஜ கோபுரங்களில் உள்ள கும்பங்களில், 275 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த அவரி நெல் விதைகள் தமிழகத்தில் விதைக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டது. பின்னர் அறுவடை செய்யப்பட்ட 150 கிலோ அவரி நெல், தற்போது கோயில் கோபுர கலசங்களில் நிரப்பப்பட்டு அந்த கும்பங்களில், கோயில் தந்திரி மற்றும் வேத பண்டிதர்கள் புனிதநீரை ஊற்றி குடமுழுக்கை விமரிசையாக நடத்தினர்.
பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இக்கோயில் குகைகளில் உள்ளதால் கூடுதல் சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் கேரள போலீசாரின் பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.