சென்னை தாம்பரம் அருகே உள்ள அரசு ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கால் உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ஜட்ஜ் காலனியில் செயல்பட்டு வரும் அரசு ஆதரவற்ற பெண்கள் காப்பகத்திற்குள் பெண் குழந்தைகள் படிப்பதற்கான அரசுப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.
இந்த காப்பகத்தில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தந்தையை இழந்த 13 வயது சிறுமி தங்கி 8ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், அதிகாலை சிறுமியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காப்பக ஊழியர்கள் சிறுமியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது, கால் உடைந்தது குறித்து சிறுமியிடம் மருத்துவர்கள் கேட்டுள்ளனர்.
அப்போது, அதிகாலை தூங்கிக்கொண்டிருந்தபோது விடுதிக்கு வந்த காவலாளி தனது வலது காலை உடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சிறுமி கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், சிறுமியை மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
இதனை அடுத்து காப்பகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஒப்பந்த காவலாளி மேத்யூ என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.