ஆர்சிபி அணியின் பாராட்டு விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி காவல்துறை அதிகாரி அரசுக்கு எழுதிய கடிதம் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் 11 பேரின் உயிரிழப்புக்கு அரசின் அலட்சியமே காரணம் என்பது அம்பலமாகி உள்ளது.
ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பை வென்றதை அடுத்துக் கடந்த 4ஆம் தேதி பெங்களூருவில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று காவல் துறையினர் எச்சரித்ததாகவும், அரசு அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. அதற்குக் கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில், பாராட்டு விழா நடத்தினால் பாதுகாப்பு சிக்கல் ஏற்படும் எனக்கூறி, கர்நாடக நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் சத்யவதிக்கு, விதான் சவுதா பாதுகாப்பு பிரிவின் காவல் துணை ஆணையர் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் போதுமான எண்ணிக்கையில் காவலர்களும், சிசிடிவி கேமராக்களும் இல்லாதது உள்ளிட்ட குறைபாடுகளை அவர் அந்த கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த எச்சரிக்கையையும் மீறி கர்நாடக அரசு பாராட்டு விழாவுக்கு அனுமதி வழங்கியது தற்போது அம்பலமாகியுள்ளது.