தேனி அருகே கடன் தொகையைச் செலுத்தத் தாமதம் ஏற்பட்டதால் வீட்டின் சுவற்றில் “நிதி நிறுவனத்தின் சொத்து” என ஊழியர்கள் எழுதிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், குன்னூர் அருகே அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் தனக்குச் சொந்தமான வீட்டை அடமானம் வைத்து தனியார் நிதி நிறுவனத்தில் 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற கடனுக்கான வட்டியை முறையாகச் செலுத்தி வந்த நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாகக் கடந்த 2 மாதங்களாகத் தவணைத் தொகையைச் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
தொகையை வசூலிக்க மகேஸ்வரி வீட்டிற்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் பேசி கடன் தொகையை வசூலிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், வீட்டின் சுவற்றில் “நிதி நிறுவனத்தின் சொத்து” என எழுதிச் சென்றுள்ளனர். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான மகேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.