மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக தாக்கல் செய்யப்பட்ட திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, திமுக உறுப்பினர்களான வில்சன், சண்முகம், அப்துல்லா, அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக காலியாகும் இந்த 6 இடங்களுக்கும் ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் திங்கட்கிழமையுடன் நிறைவடைந்தது.
இந்த தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் வில்சன், சிவலிங்கம், கவிஞர் சல்மா, திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இதேபோல் அதிமுக சா்பில் இன்பதுரை, தனபால் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராகி உள்ளார்.