பாசத்துக்கும் பண்புக்கும் பெயர் போன கொங்குப் பகுதி கொலைக்களமாக மாறி வரும் நிலையில், எப்போது விழித்துக்கொள்ளும் திமுக அரசு? என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
திருப்பூர் மாவட்டம், சேனாதிபாளையம் கிராமத்தில், ஆடு மேய்க்கச் சென்ற முதிய தம்பதியரான வேலுச்சாமி-சாமியாத்தாள் ஆகியோர் பட்டப் பகலில் கல்லால் அடித்து மர்ம முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
சிவகிரி இரட்டைக் கொலை, ஈரோடு மூதாட்டி கொலை எனத் தொடர்ந்து கொங்குப் பகுதியில் வாரம் ஒரு கொலைச் சம்பவம் நடப்பது சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
முதியவர்களுக்குக் கூட பாதுகாப்பு அளிக்க இயலாத அளவுக்கு திராவிட மாடல் அரசு திறனற்ற நிலையில் இருக்கிறதா? பாசத்துக்கும் பண்புக்கும் பெயர் போன கொங்குப் பகுதி கொலைக்களமாக மாறி வரும் நிலையில், எப்போது விழித்துக்கொள்ளும் திமுக அரசு? வழக்கம்போல, தற்போதும் விசாரணை எனக் கண்துடைப்பு நடவடிக்கையில் ஈடுபடாமல், உடனடியாகத் தனிப்படை அமைத்துக் கொங்குப் பகுதியில் முதியவர்களைத் தாக்கும் கயவர்களைக் கைது செய்து மக்கள் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.