திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்புபவர்களை மிரட்டுவது மட்டுமே காவல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றப்பட்டிருக்கிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
திருப்பூர் மாவட்டம் சேனாபதிபாளையம் கிராமத்தில், கொங்கு மண்டலத்தில், ஆடு மேய்க்கச் சென்ற வயதான தம்பதியினர், கல்லால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தொடர்ந்து கொங்கு பகுதியில் வயது முதிர்ந்தவர்கள் கொலை செய்யப்படுவது, காவல்துறை இதுவரை எடுத்ததாகக் கூறும் நடவடிக்கைகளைக் கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது.
திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்புபவர்களை மிரட்டுவது மட்டுமே காவல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றப்பட்டிருக்கிறதே தவிர, குற்றங்களைத் தடுப்பதாகத் தெரியவில்லை.
வெறும் விளம்பரங்கள் மக்களைக் காப்பாற்றாது. கொங்கு பகுதிகளில் தொடரும் இதுபோன்ற படுகொலைகள் குறித்து, தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல், முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழக மக்களுக்கு விளக்கமளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.