சென்னை மந்தைவெளி அருகே புதுப்பிக்கப்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பில் ஏற்கனவே வசித்து வந்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது. உரிய ஆதாரங்கள் இருந்தும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வீடுகள் ஒதுக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை மந்தைவெளி ஆர்.கே.நகர் வன்னியம்பதி குப்பை மேடு பகுதியில் இருந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பு பழுதடைந்த நிலையில் இருப்பதாகக் கூறி கடந்த 2020ம் ஆண்டு இடிக்கப்பட்டது. குடியிருப்பு இடிக்கப்படுவதற்கு முன்பாக அங்குத் தங்கியிருந்த 500க்கும் அதிகமான குடும்பங்களுக்கு அதே இடத்தில் கட்டப்படும் புதிய குடியிருப்புகளில் இடம் ஒதுக்கப்படும் என வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.
பதினெட்டு மாதங்களில் புதிய குடியிருப்பு கட்டி முடிக்கப் படும் என அறிவித்த நிலையில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு அதாவது அண்மையில் தான் அந்த குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கால தாமதமாகக் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்பில், ஏற்கனவே தங்கியிருந்த பொதுமக்களுக்கு மீண்டும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
பழைய குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய குடியிருப்புகளைக் கட்டித்தருகிறோம் என வாக்குறுதியளித்த அரசு நிர்வாகம், குடியிருப்புகளைக் கட்டி முடித்த பின்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்களுக்கு மீண்டும் வீடுகள் ஒதுக்கப்படும் என்ற கனவில் மந்தைவெளி பகுதியிலேயே சுமார் 5 வருடங்களுக்கு வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வந்த பொதுமக்கள் தற்போது கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
புதிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படுவதற்கு மந்தை வெளிப்பகுதியின் திமுக வட்டச் செயலாளர் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் வரை கமிசன் கேட்பதாகவும், கமிசனை கொடுக்க முடியாதவர்களுக்கு வீடுகளை ஒதுக்க முடியாது என அதிகாரப் போக்குடன் பேசுவதாகவும் மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்
சிறு வயதிலிருந்து வசித்து வந்த குடியிருப்பில் வசித்து வந்தவர்களுக்கு வீடுகளை ஒதுக்காமல் திமுகவின் ஆதரவாளர்கள் பலருக்கு வீடுகள் ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடியிருப்பிலிருந்ததற்கான சான்றிதழ் என அனைத்து ஆதாரங்களையும் வழங்கிய பின்பும் வீடுகள் ஒதுக்க மறுப்பதாக அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பழைய குடியிருப்புகளை இடிக்கும் போது இலவசமாக வீடுகள் கட்டித்தரப்படும் எனத் தெரிவித்துவிட்டு தற்போது 11 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே வீடுகள் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் கூறுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வசித்து வந்த மக்கள், குடியிருப்பைப் புதுப்பிக்கிறோம் எனும் பெயரில் வெளியேற்றப்பட்டிருக்கிறார். தங்க வீடுகளின்றியும், யாருடைய ஆதரவின்றியும் தவித்து வரும் மக்களுக்கு ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி முறையான குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.