திருச்சி அருகே மலைக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். வெளிச்சமே இல்லாத கிராமத்திலிருந்து சட்டம் பயிலப்போகும் அந்த மாணவர் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.
திருச்சி மாவட்டம் பச்சமலைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் பத்திற்கும் அதிகமான மலைக்கிராமங்கள் அமைந்துள்ளன. நூற்றுக்கணக்கான குடும்பங்களைக் கொண்ட பச்சமலையில் விவசாயம் மட்டுமே பிரதானமாக விளங்கி வருகிறது. அவசர தேவைக்குக் கூட மலையைக் கடந்து 30 கிலோ மீட்டர் கடந்து பயணிக்க வேண்டிய நிலையில் வாழ்ந்து வரும் கிராம மக்கள், கூலி வேலைக்குச் சென்று தங்களின் அன்றாட வாழ்க்கையைக் கடத்தி வருகின்றனர். அத்தகைய கிராமத்தில் இருந்து தன்னுடைய கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியின் மூலம் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் மாணவர் பரத்.
பத்து வருடங்களுக்கு முன்பாகவே தாயை இழந்த பரத்திற்கு உறுதுணையாக இருந்து ஊக்கமளித்தவர் அவருடைய தந்தை செல்வக்குமார் தான். தான் படும் கஷ்டங்களை தன்னுடைய மகன் அனுபவிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த செல்வக்குமாரின் செயல்பாடுகளே பரத் இன்று தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சிபெறும் அளவிற்கான தன்னம்பிக்கையை விதைத்துள்ளது.
வெளிச்சமே இல்லாத கிராமத்திலிருந்து சாதனை படைத்திருக்கும் மாணவர் பரத்தின் வெற்றிக்கு அவரது தந்தை மட்டுமல்ல ஆசிரியர்களும் உந்து சக்தியாகத் திகழ்ந்துள்ளனர். தந்தையின் ஊக்கத்தாலும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலாலும் தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலப்போகும் மாணவர் பரத்தின் எதிர்காலம் மலைவாழ் கிராம மக்கள் படும் துயரங்களை போக்கக்கூடியதாக அமையட்டும்.