சென்னையில் இருக்கும் தனது மனைவியைத் துபாயில் இருந்தபடியே கூலிப்படையை ஏவி கணவன் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நாட்களாகத் திட்டமிட்டு நண்பர்களையே கூலிப்படையாக ஏவி மனைவியைக் கொலை செய்யத் திட்டமிட்ட கணவர் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சென்னை சூளைமேடு பஜனை கோயில் தெருவில் வசித்து வரும் பெனாசீர் பேகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவர் உசேன் தனியாக துபாயில் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெனாசீர் பேகம் கடந்த இரண்டாம் தேதி சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்த போது அவரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் தப்பியோடியுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த பெனாசிர் பேகம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெனாசீர் அளித்த புகாரின் படி கொலை முயற்சி மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சூளைமேடு காவல்நிலைய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தனிப்படைகள் அமைத்துத் தேடப்பட்ட நிலையில், பட்டுக்கோட்டையில் பதுங்கியிருந்த குற்றவாளிகளைக் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து துபாயில் வசிக்கும் உசேனின் நண்பர்கள் தான் பெனாசீரை தாக்கியிருப்பது காவல்துறை நடத்திய விசாரணையில் உறுதியாகியுள்ளது. துபாயில் இருந்தபடியே தஞ்சாவூரைச் சேர்ந்த தனது நண்பர்களை வைத்து பெனாசீரை தாக்கக் கடந்த ஒரு மாதமாகத் திட்டமிட்டதாகவும், அதற்காகப் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தனது நண்பர்களுக்கே 30 ஆயிரம் பணம் கொடுத்து அவர்களைக் கூலிப்படையாகப் பயன்படுத்தி பெனாசீர் பேகத்தின் மீது தாக்குதல் நடத்த உசேன் திட்டமிட்டதும் கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரை காவல்துறை தேடி வருகிறது.
பெனாசீர் பேகத்தின் தந்தை மீதும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதே பாணியில் தாக்குதல் நடைபெற்றிருக்கும் நிலையில் அதற்கும் உசேனுக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரே தன்னுடைய மனைவியைக் கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.