AI வருகையால், வேலை இழப்புகள் ஏற்படும் என்ற அச்சம் மேலோங்கி வரும் நிலையில், ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, மனிதர்களால் மட்டுமே செய்யக் கூடிய வேலைகள் இன்னும் நிறைய உள்ளன என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
புரட்சிகரமான தொழில்நுட்பங்களில் ஒன்றான AI ஆதிக்கம் செலுத்தாத துறைகளே இல்லை என்று சொல்லிவிடலாம். அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் AI, வாழ்க்கையை எளிதாகவும் திறமையாகவும் பயன்படுத்த உதவியுள்ளது.
1955 ஆம் ஆண்டு ஜான் மெக்கார்த்தி என்பவரால் செயற்கை நுண்ணறிவு என்ற சொல் உருவாக்கப்பட்டது. முன்னதாக,1950 களில், ஆலன் டூரிங் போன்ற கணினி விஞ்ஞானிகள் இயந்திர கற்றல் மற்றும் அறிவார்ந்த அமைப்புகள் குறித்த தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் நவீன AI க்கு அடித்தளமிட்டனர்.
இன்று, AI மிக முக்கியமான தொழில்நுட்பமாக உருவாகியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் முதல் ஸ்மார்ட் வீடுகள் வரை,எங்குப் பார்த்தாலும் AI, வாழும், வேலை செய்யும் மற்றும் தொடர்பு கொள்ளும் விதத்தைப் புதுமையாக மாற்றி வருகிறது.
AI என்பது மனிதர்களைப் போலச் சிந்திக்கவும், கற்றுக்கொள்ளவும், செயல்படவும் திட்டமிடப்பட்ட மனித நுண்ணறிவின் உருவகமாகும். இதன் மூலம், சிக்கல் தீர்க்கும் திறன், முடிவெடுக்கும் திறன் மற்றும் படைப்பாற்றல் போன்ற மனித நுண்ணறிவு தேவைப்படும் அனைத்து பணிகளையும் AI யால் செய்ய முடியும்.
எங்குப் பார்த்தாலும் AI- இதற்குக் காரணம் மனிதர்கள் செய்யும் வேலைகளை அதே திறமையுடன் AI செய்வது தான். அண்மையில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளின் முடிவுகள், GEN Z ஊழியர்களின் வேலைகளைச் செயற்கை நுண்ணறிவு பறித்துவிடும் என்று தெரிவித்துள்ளன.
AI பெரும்பாலான வகையான வேலைகளைப் பறித்துக்கொள்ளும் நிலையில் சமூகத்தில் எந்த மாதிரியான மாற்றங்கள் உருவாகும் ? இந்த சூழ்நிலையைச் சரியாக எடைபோட்டு, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோவின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இது குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
AI பற்றி யோசிக்கும் போது, வேலைவாய்ப்பு பற்றி மட்டும் பார்க்காமல்,பொருளாதாரம் சார்ந்த பிரச்சனையாகப் பார்க்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஸ்ரீதர் வேம்பு, தொழிற்சாலை ஒன்றில், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தாமல் AI மூலம் அதிகமாக உற்பத்தியாகி சந்தைக்கு வரும் அனைத்து பொருட்களையும் எவ்வாறு மக்கள் வாங்க முடியும்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
AI மற்றும் ரோபோகளால் தயாரிக்கப் பட்ட பொருட்களின் விலை பெருமளவில் குறையும் என்றும், சொல்லப்போனால் விலையில்லாமல் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றும் ஸ்ரீதர் வேம்பு எச்சரித்துள்ளார். மேலும், AI யால் ஒருபோதும் செய்ய முடியாத மற்ற எல்லா வேலைகளுக்கும் அதிகமான சம்பளம் கிடைக்கும் நிலை ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.
குறிப்பாக, குழந்தைகளைப் பராமரித்தல், வீட்டில் சமைத்த உணவுகள், நோயாளிகளைக் கவனித்தல், விவசாயம் செய்தல், கால்நடைகளை வளர்த்தல் ஆகிய பணிகளுக்கு அதிகமான சம்பளம் கிடைக்கும் என்று விளக்கியுள்ளார்.
எனவே, AI சில வேலைகளைப் பறித்துக் கொண்டாலும், மனித உழைப்புக்கு அதிக ஊதியம் கிடைக்கும் என்பதால், வாழ்க்கையைத் தக்கவைக்கக் கொள்ள இது போதுமானதாக இருக்கும் என்று ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படையில் இது முற்றிலும் தொழில்நுட்ப பிரச்சினை அல்ல. பொருளாதார விநியோகப் பிரச்சினையால் ஏற்படக் கூடிய அரசியல் பொருளாதாரத்தின் பிரச்சினை ஆகும். AI யால் உருவாக்கப்படும் பொருட்களின் விலைகள் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருப்பதை உறுதி செய்வதும், தொழில்துறையின் ஏகபோகங்களை ஒடுக்குவதும் அரசின் முக்கிய கடமையாகும் என்றும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.