எட்டயபுரம் அருகே லாரி மீது நீதிபதி சென்ற கார் மோதிய விபத்தில், 4 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூரை சேர்ந்த நீதிபதி ஆனந்த் உட்பட 6 பேர் திருச்செந்தூருக்கு இன்னோவா காரில் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, மேலக்கரந்தை அருகே தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலையில், முன்னால் சென்ற லாரி மீது நீதிபதியின் கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில், நீதிபதியின் பாதுகாவலர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த நீதிபதி உட்பட 2 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஞான ஜெரீதா, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், விளாத்திகுளம் டி.எஸ்.பி. அசோகன், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.