அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எதிர்பாராத வகையில் விபத்துக்குள்ளானது 12 விமானப் பணிக்குழு உறுப்பினர்கள் உட்பட 241 பேர் பலியாகியுள்ளனர். இது நாடு முழுவதும் பேரதிர்ச்சியையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமான விபத்து, முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தொடங்கி இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற இருந்த மூத்த விமானி, கிராமப் பெண்களுக்கு உத்வேகமாகத் திகழ்ந்த இளம் பெண்கள் வரை, பல குடும்பங்களை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் ட்ரீம்லைனர் விமானத்தில் 12 விமானப் பணிக் குழுவினர், 230 பயணிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் பிரிட்டன் நாட்டையும், 7 பேர் போர்ச்சுகீஸ் நாட்டையும், ஒருவர் கனடாவையும் சேர்ந்தவர்கள்.
குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி நாட்டின் பிரதமரானதால், விஜய் ரூபானி 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை குஜராத் மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார். 2021 செப்டம்பரில் தனது பதவியை ராஜினாமா செய்த அவர், பாஜக நாடாளுமன்றக் குழுவின் மத்திய பார்வையாளர், மகாராஷ்டிராவில் முதல்வர் தேடுதல் குழு உறுப்பினர் எனக் கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார்.
லண்டனில் இருக்கும் தனது மகளைப் பார்ப்பதற்காக ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட்ட விஜய் ரூபானியும் இந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளார். பிரதிக் ஜோஷி கடந்த 6 வருடங்களாக லண்டனில் வசித்து வந்தார். ஒரு SOFTWARE ENGINEER ஆன அவர், தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுக்கு வெளிநாட்டில் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்று நீண்ட காலமாகக் கனவு கண்டு வந்தார். உரிய அரசு அனுமதிகளுக்குக் காத்திருந்த பிறகு இறுதியாக அவரது கனவு நிறைவேறியது.
ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாராவைச் சேர்ந்த பிரபல மருத்துவரான அவரது மனைவி கோமி வியாஸ் இரண்டு நாட்களுக்கு முன் தனது வேலையை ராஜினாமா செய்தார். நல்ல எதிர்காலம் வந்துவிட்டது என்ற சந்தோஷத்தில் லண்டனுக்குக் கிளம்பத் தயாரானார்கள். உற்சாகத்துடன் ஏர் இந்தியா விமானத்தில் ஏறியவுடன் குடும்பத்துடன் ஒரு SELFI எடுத்தனர். ஒரு புதிய வாழ்க்கைக்கான ஒரு வழிப் பயணம் எனத் தலைப்பிட்டு தங்கள் உறவினர்களுக்கு அந்த SELFI பகிர்ந்துள்ளனர்.
இனி வீடியோ காலில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேச வேண்டிய தேவை இல்லை என எண்ணியிருந்த பிரதீக் ஜோஷியின் கனவு பொய்யாகி விட்டது. இனி கணவரோடும் நம் பிள்ளைகளோடும் லண்டனில் புது வாழ்க்கையைத் தொடங்கலாம் எனப் புறப்பட்ட கோமி வியாஸின் ஆசை நிராசை ஆகி விட்டது. இனி அப்பா அம்மாவுடன் வெளிநாட்டில் ஜாலியாக இருக்கலாம் எனப் பிஞ்சு குழந்தைகளின் எண்ணமும் சாம்பலாகி விட்டது.
SELFI யில் மிகவும் சந்தோஷமாக இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் வாழ்க்கையும் ஒரு கனவு போல் சில நொடிகளில் முடிந்து விட்டது. இந்திய வம்சாவளியான 36 வயதான அர்ஜுன் மனுபாய் படோலியா லண்டனில் வசித்து வந்தார். ஏழுநாட்களுக்கு முன், அர்ஜுனின் மனைவி பாரதிபென் மரணமடைந்தார். இறப்பதற்கு முன் தனது இறுதி ஆசையை தன் கணவரிடம் சொல்லியிருக்கிறார்.
ஒரு மலர் கலசத்தில் அஸ்தியை இந்தியாவில் பூர்வீக ஊரில் உள்ள வீட்டில் வைத்து,இறுதிச் சடங்குகள் செய்து, நர்மதை ஆற்றில் அஸ்தியை கரைக்க வேண்டும் என்பது தான் பாரதிபென்னின் இறுதி ஆசை. மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக, இந்தியா வந்த அர்ஜுன், குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பூர்வீக கிராமத்தில் உறவினர்களுடன் இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தார். நர்மதை ஆற்றில் மனைவியின் அஸ்தியைக் கரைத்துவிட்டு, லண்டனுக்குத் திரும்ப தயாரானார். தாயில்லாத நிலையில், 8 மற்றும் 4 வயதுடைய தம் மகள்களை எப்படி ஆளாக்குவது என்ற பாரமான சிந்தனையுடன் லண்டன் திரும்ப இருந்த அர்ஜுன் விமான விபத்தில் உயிரிழந்து விட்டார். இரண்டு மகள்கள் இப்போது ஆதரவற்றாகியுள்ளனர். ஒரு வாரத்துக்கு முன்பு தாயை இழந்து, இப்போது தந்தையையும் இழந்து நிற்பது கொடுமையானதாகும்.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் மூத்த விமானி, 60 வயதான சுமித் சபர்வால், மும்பையில் தனது 90 வயது தந்தையுடன் வசித்து வந்தார். வானத்திலேயே பறந்து கொண்டிருந்த அவர், இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற இருந்தார். இரண்டு மகன்களும்,வணிக விமானிகளாக உள்ள நிலையில்,ஓய்வு பெற்றதும், தந்தையுடன் அதிக நேரம் செலவிடத் திட்டமிட்டிருந்தார்.
11000 மணி நேரத்துக்கும் மேல் விமானம் ஒட்டிய அனுபவம் மிக்க சுமித் சபர்வாலின் மரணம் அவரது குடும்பத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் பதலாபூர் பகுதியைச் சேர்ந்த ஏர் இந்தியா விமானப் பணிப்பெண் தீபக் பதக்கும் இந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். 11 ஆண்டுகளுக்கும் மேலாக விமான நிறுவனத்தில் அர்ப்பணிப்புள்ள ஊழியராக இருந்த தீபக், எந்த ஒரு விமான பயணத்துக்கும் முன்பும் வீட்டுக்கு அழைத்துப் பேசுவதைத் தனது வழக்கமாக வைத்திருந்தார். இந்த முறை அழைத்த அழைப்பு தான் கடைசி அழைப்பாக இருக்கும் என்று அவரோ, அவர் குடும்பத்தினரோ ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள்.
மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தின் பன்வேலில் கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான இன்னொரு விமானப் பணிப்பெண் மைதிலி மோரேஸ்வர் பாட்டீல் உயிரிழந்த செய்தி கேட்டு, அவரின் சொந்த கிராமமே மீளா சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஒரு சாதாரண எளிய பின்னணியில் இருந்து வந்த போதிலும், விமானப் போக்குவரத்துத் துறையில் தனது கனவுகளைத் தொடர அவர் மேற்கொண்ட கடின உழைப்பு மற்ற கிராமப் பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்தது என்று அக்கிராமத்து மக்கள் நினைவு கூர்கின்றனர்.
இது தவிர மகாராஷ்ட்டிரா மாநிலத்தின் தானே பகுதியில் உள்ள டோம்பிவிலியைச் சேர்ந்த 27 வயதான ரோஷ்னி ராஜேந்திர சோன்கரே, ஒரு விமானப் பணிப்பெண்ணாக ஆவது தனது “கனவு” என இருந்தவர். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைச் சுமார் 54,000 பேர் பின்தொடர்கின்றனர். தனது விமானப் பணி பற்றிய குறிப்புக்களைத் தொடர்ந்து இன்ஸ்டாவில் வெளியிட்டு வந்தார்.
ஏர் இந்தியா கேபின் குழு உறுப்பினராக இருந்த மணிப்பூரைச் சேர்ந்த Kongbrailatpam Nganthoi Sharma (கோங்பிரைலட்பம் நந்தோய் சர்மாவும்) பலியாகியுள்ளார். மேலும், அகமதாபாத் விமான விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 42 வயதான செவிலியர் ரஞ்சிதா கோபகுமாரனும் பலியாகியுள்ளார். இவர் கடந்த ஓராண்டாக லண்டனில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
சொந்த ஊரில், கேரள அரசு மருத்துவமனையில் ரஞ்சிதாவுக்கு வேலை கிடைத்துள்ள நிலையில், கேரளா வந்த ரஞ்சிதா, லண்டனுக்கு சென்று ராஜினாமா கடிதம் கொடுக்க முடிவு செய்தார். சொந்த ஊரில் வீடு கட்டிவரும் ரஞ்சிதா, விரைவில் சொந்த ஊரில் சொந்த வீட்டில், குடும்பத்துடன் வாழத் தான் கண்ட கனவு நிறைவேறப் போகிறது என்ற மகிழ்ச்சியுடன் லண்டனுக்குக் கிளம்பினார். கனவு கனவாகவே பொய் விட்டது. ரஞ்சிதாவின் குழந்தைகளை தேற்ற முடியாமல் தவித்து வருகிறார் அவரது தாய். விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாக, பிரிட்டனைச் சேர்ந்த விஸ்வாஷ்குமார் மட்டும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளார். அவரது சகோதர் அஜய்குமார் ரமேஷ் உயிரிழந்துள்ளார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட கிஷோர் தனது இறுதி நாட்களைத் தான் பிறந்த நாட்டில் செலவிட விரும்பியதால், கணவருக்காக Raxa Modha இந்தியா வந்துள்ளார். கிஷோர் இறந்துபோக, Raxa Modha, தனது மருமகள் Yasha Kamdar மற்றும் 2 வயது பேரன் Rudra உடன் மீண்டும் பிரிட்டனுக்குத் திரும்பிய புறப்பட்ட நிலையில், இப்போது அவர்களில் யாரும் உயிரோடு இல்லை.
சமூக ஊடகங்களில் பிரபலமான Wellness influencers ஆன Fiongal மற்றும் Jamie Greenlaw-Meek ஆகிய இரண்டு பேரும், விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர். கனடாவைச் சேர்ந்த பல் மருத்துவரான நிராலியும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். நிராலியின் கணவர், ஒரு வயதுக் குழந்தையுடன் இந்தியாவுக்குத் தாங்க முடியாத துயரத்துடன் கனடாவில் இருந்து இந்தியாவுக்குக் கிளம்பியுள்ளார்.
மேலும், 6 வயது மகள் சாராவுடன் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்த Akeel Nanawaba – Hanna Vorajee தம்பதியர் மீண்டும் இங்கிலாந்துக்குத் திரும்பமுடியாமல் போய்விட்டது. இதேபோல், விடுமுறைக்காக இந்தியா வந்த Javed Ali Syed, Mariam தம்பதியரும் தங்கள் 4 வயதான Amani மற்றும் 2 வயதான Zayn ஆகிய குழந்தைகளுடன் இந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு. ஒவ்வொரு ஆசை, ஒவ்வொரு வாழ்க்கை எல்லாம் கண நேரத்தில் சாம்பலாகி விட்டன. இந்த விமான விபத்து, காலத்தின் பயங்கரமான நினைவூட்டலாகும். மனிதர்களின் அனைத்து கனவுகளும் அனைத்து ஆசைகளும், காலத் தேவனின் கையில் உள்ள நூலில் தொங்குகின்றன. எப்போது எது எப்படி நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்.