சென்னை தாம்பரம் அடுத்த திருநீர்மலையில் பழுதடைந்த மின்கம்பம் குடிசை வீட்டின் மீது விழுந்து தீ விபத்து ஏற்பட்டது.
லால்பகதூர் சாஸ்திரி தெருவில் கிருஷ்ணவேணி மற்றும் அவரது மகன்களின் வீடுகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்நிலையில், பழுதடைந்த மின்கம்பம் வீட்டின் மீது சாய்ந்ததில் மின் வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி வீடு தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடம் சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனிடையே பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர் கோரிக்கையால் தற்போது மின் கம்பத்தை மாற்ற பள்ளம் தோண்டிய மின் வாரிய ஊழியர்கள் பணிகளை கைவிட்டதால் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.