வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 15ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 58.83 அடியாக உள்ளது.
அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், வரும் 15ஆம் தேதி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 15 முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை வினாடிக்கு 900 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6 ஆயிரத்து 739 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனால், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறியுள்ளனர்.