அடையாள அட்டை உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்களை இலவசமாக வழங்க மாற்றுத் திறனாளிகள் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில் சென்னையில் இதுதொடர்பான கண்காட்சி நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறப்புத் திறன் கொண்டவர்களுக்குப் புதுவித நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடந்த கண்காட்சி குறித்த சிறப்புத் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டிற்காக நடைபெற்றது இந்த நவீன உதவி உபகரணங்கள் கண்காட்சி. மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறப்புத் திறன் கொண்டவர்களுக்கான பயன்பாட்டு உதவி உபகரணங்கள் தயாரிக்கும் சுமார் 50 நிறுவனங்கள் பங்கேற்ற கண்காட்சியில் நவீனத் தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் கூடிய உதவி உபகரணங்கள் மிகுந்த பயனளிக்கும் வகையில் அமைந்திருந்தன.
பார்வை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் பிரெய்லி முறை பயன்பாட்டுக் கருவிகள், டாக் பேக் வசதியுடன் கூடிய நவீன எழுத்து ஸ்கேனர்கள், நாம் காண்பவை அனைத்தையும் வேண்டுகிற மொழியில் விளக்கிக் கொடுக்கும் லைவ் கேமிராக்கள் ஆகிய உபகரணங்கள் காட்சிப்படுத்தப் பட்டன. காது கேளாதோர் பயன்படுத்த உதவும் எமர்ஜன்சி இண்டிகேட்டர் வாட்ச், தெளிவான உள்ளீட்டை கொடுக்கும் நாய்ஸ் கன்ட்ரோல் செவிக் கருவிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் பேட்டரி வாகனங்கள், உட்கார்ந்திருந்தபடியே, நிற்க உதவும் டூ இன் ஒன் இருக்கை எனப் பல வகையான உபகரணங்களும் இடம்பெற்றிருந்தன.
இந்த கண்காட்சியில் கை இழந்தவர்களுக்கான செயற்கை கைகள் பொருத்திக் கொள்ளும் விதமாக தத்ரூபமான கைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிம்பியோனிக் எனப்படும் நிறுவனத்தின் நிறுவனர் ரிஷி, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிச்சேரி செல்லும் போது விபத்தில் சிக்கி தனது வலது கையை இழந்துள்ளார். அதன் பின்னர் தனக்கான மாற்று கைகள் குறித்துப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ரிஷியே அவருக்கான கையை வடிவமைத்து, அவற்றை பொருத்திக் கொள்ள ஏதுவாக செயற்கையான உருவாக்கத்தைக் கொடுத்துள்ளார்.
அதே போலப் பார்வை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் கேன் எனப்படும் வழிகாட்டி ஊன்று கோலை ஒரு நிறுவனம் நவீனமயமாக்கி உள்ளது. அதில் உள்ள சென்சார்கள் எதிர் திசையில் உள்ள பொருட்களின் மீது அலைகளை வீசச் செய்து பயனாளருக்கு வைப்ரேஷன் மூலம் வழி காட்டுகிறது.
பார்வை மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் பெங்களூரை சேர்ந்த நிறுவனம் டெக்ஸ்ட் ஸ்கேனர் கேமரா மூலம், ஒரு மென் பொருளை பயன்படுத்தி, அந்த உள்ளீடுகளை கேப்ட்சர் செய்து தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என 60 மொழிகளில் மொழிபெயர்த்து வாசிக்கின்றது. இது தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள நூலகங்களில் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த ஷிவானி ப்ரீத்தி தெரிவித்தார்.
இது போலப் பார்வை மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகச் சென்னை நந்தனம் கல்லூரியின் ஆங்கில பேராசிரியர் ரகுராமன் தெரிவித்தார். அதே போல அவசரக் காலங்களில் செவித்திறன் குறைபாடு உடைய பயனாளர்களுக்கு உதவும் விதமான கடிகாரம், சென்னை ஐஐடி மெட்ராஸ் தயாரித்திருக்கும் பார்வையற்றவர்கள் படிக்க எதுவான 2 D பிரிண்டர் ஆகியவை எளிய முறையில் சிறந்த பயனை அளிக்கும் கருவிகளாகக் காணப்பட்டன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறப்புத் திறன் கொண்டவர்கள், இந்த கண்காட்சியைக் கண்டு வியந்ததோடு தங்கள் கருத்துக்களையும் வழங்கிச் சென்றனர்.