நீலகிரி மாவட்டம் குன்னூரில் நகராட்சி கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்னூர் நகராட்சிக்குச் சொந்தமான மார்க்கெட் பகுதியில் 800 கடைகள் செயல்பட்டு வருகின்றன. பழமையான கடைகளை இடித்துவிட்டு புதிதாகக் கட்ட கலைஞர் நகர் புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், வியாபாரிகள் கடைகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், 24 மணி நேரத்திற்கு முழு கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து வியாபாரிகளின் போராட்டம் தொடங்கியதால் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், போராட்டத்தையொட்டி குன்னூர் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.