சிறந்த மாணவர்கள், மருத்துவர்கள் ஆவதற்கு நீட் தேர்வு வேண்டும் என இளநிலை நீட் தேர்வில் திருச்சி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மே 4-ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் அதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
இதில், திருச்சி மாவட்டம், புத்தூரைச் சேர்ந்த அஸ்வின் கார்த்திக், 601 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், இந்திய அளவில் 775-வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளார்.
இதுகுறித்து பேட்டியளித்த அவர், தாய், தந்தை இருவரும் மருத்துவர்கள் என்பதால் சிறுவயதில் இருந்தே தனக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்ததாகக் கூறினார்.
சிறந்த மாணவர்கள் மருத்துவர்கள் ஆவதற்கு நீட் தேர்வு கட்டாயம் வேண்டும் எனக் கூறிய அவர், தேர்வைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை எனவும் கேட்டுக் கொண்டார்.